Sunday, August 4, 2013

சிங்கள நண்பனுக்கு..

0 கருத்துக்கள்








எங்கள் மீது வீசப்பட்ட தீப்பிழம்புகளை
புகைப்படாமாக்கி காண்பித்தோம்
அதை ஓவியம் என்றாய்..

எங்கள் பிணத்தை புணர்ந்த
ராட்சசனின் குரலை காட்டினோம்
அதை புனைவு என்றாய்..

வீடுகளை இழந்து
எங்கள் தெருக்களை இழந்து
உனது தேசத்திலும்
பிறிதொரு தேசத்திலும்
அடிமைகளாகி கிடக்கிறோம் என்றோம்
எமை பிரிவினைவாதிகள் என்றாய்...

எமக்கு தமிழ்மீது தீராத காதல்
உன் மொழியை நீ கொண்டாடுவது போல் - எம்
தமிழில் உரக்க கத்த ஆசை என்றோம்
எமை இன வெறியர் என்றாய்...


இராணுவ இயந்திரம்
கொடூரமானது என வாக்கு மூலம் கொடுத்தோம் - எமை
பயங்கரவாதிகளால்
மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்றாய்...

கடத்தல்களும் கற்பழிப்புக்களும்கொலைகளும்
மிஞ்சிவிட்டது என்றோம்
அழகான தேசத்தை
அசிங்கமாய் விமர்சிக்கிறாய் என்றாய்..

சிங்கள நண்பனே!!!
நீ
மதவெறி ஊட்டப்பட்டவன்
உன் தாய்மொழியின் தோற்றமே உனக்கு தெரியாதவன்
இந்திய இளவரசனிடம் மதத்தை கடன் வாங்கியவன்
வாழ்ந்த தேசத்தில் - உன்
வரலாறுகளை எப்படி எழுதுவதென்று தெரியாமல்
எத்தனையோ தடவை
அழித்தழித்து எழுதிவிட்டாய்..
நீ ஒரு அப்பாவி..
தாய்தந்தை தெரியாமல் பிறந்த
அனாதைக் குழந்தைதான் உன் இனம்

 உன் மீதான அனுதாபத்தில்
எமது வலிகளை இன்னொரு தளத்தில்
பேச நகர்ந்து விட்டடோம்.

இன்று நீ ஒப்பாரி வைக்கிறாய்..

எமை கொன்று குவித்த - உன்
கதாநாயகர்களை
தரம் எட்டுவரை மட்டும் படித்த
பன்றிகள் என்கிறாய்..
உரிமை பற்றி பேச முடியாதபடி
வெள்ளைவான்கள்
வீதிகளில் சுற்றித்திரிகிறது என்கிறாய்
வாழ்தலின் உரிமை
இங்கில்லை என்கிறாய்..
ஓரிரு சம்பவத்திற்கு பின் எம்மிடம்
பகிரங்க மன்னிப்பு கோருகிறாய்..

இப்பொழுது கூட நீ அப்பாவி தான்
உனக்காக போராட தெரியாத கோழை நீ
உன்னவனாலேயே
அடிமையாக்கப்பட்டிருக்கிறாய்..

++++++++++++++++++++++++++++++++++++++++++

பிறிதொரு நாளில்
என் தேசம் விடிந்துவிடும்
உன் பிள்ளைக்கு என்தேசம்
அடைக்கலம் கொடுக்கும்
அடிமையாக அல்ல மனிதனாய் வாழ..


மா.குருபரன்
04-08-2013


 








0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க